|
Go To Index
அல்லாஹ்
எங்கே உள்ளான்?
ஆக்கம் :
டாக்டர் யூ.எல். அஹ்மத் அஷ்ரஃப்,
பேராசிரியர், மன்னர் காலித்
பல்கலைக்கழகம்-அப்ஹா, சவூதி அரேபியா
குர்ஆன்,
ஹதீஸ் ஆகியவற்றின் தீர்ப்புக்களுக்கிணங்க அல்லாஹ்
அர்ஷ் மீது உள்ளான் என நம்புவது ஒவ்வொரு முஸ்லீம்
மீதும் கடமையாகும். அர்ஷ் எனும் சிம்மாசனம் ஏழு
வானங்களுக்கும் அப்பால் உள்ளது, அதுதான் படைப்புகளின்
இறுதிப்பகுதியாகும், அர்ஷின் கீழ்தான் சுவர்க்கம்
உள்ளது.
ஸஹாபாக்கள், தாபியீன்கள், மரியாதைக்குரிய நான்கு
இமாம்களாகிய அபூ ஹனீபா (ரஹ்), மாலிக் (ரஹ்), ஷாஃபீஈ
(ரஹ்), அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) ஆகியோர்களும் மற்றும்
ஹதீஸ் கலையில் பிரசித்தம் பெற்ற இமாம்களாகிய புகாரி
(ரஹ்), முஸ்லிம் (ரஹ்), அபூதாவுத் (ரஹ்), திர்மிதீ
(ரஹ்), நஸாயி (ரஹ்) மற்றும் இப்னு மாஜா (ரஹ்)
ஆகியோர்களும் இக்கொள்கையைத்தான்
வலியுறுத்தியுள்ளார்கள். இன்னும் முஸ்லிம்களுக்கு
மத்தியில் மிகவும் பிரபல்யமான முஹ்யத்தீன்
அப்துல்காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களும்
இக்கொள்கையைத்தான் வலியுறுத்துகிறார்கள்.
அல்லாஹ் அர்ஷ் மீது உள்ளான்
என்பதை உறுதிப்படுத்தும் சில குர்ஆன் வசனங்கள்:
الرَّحْمَنُ عَلَى
الْعَرْشِ اسْتَوَى.
ரஹ்மான் (அல்லாஹ்) அர்ஷின் மீது
உள்ளான் (20:5).
இத்திருவசனத்தில் கூறப்பட்டுள்ள இஸ்தவா என்ற அரபுப்
பதத்திற்கு மேலே உள்ளான் என்பது பொருளாகும்.
இவ்விளக்கத்தையே அபுல்ஆலியா (ரஹ்), முஜாஹித் (ரஹ்)
போன்ற தாபிஈன்களைச் சேர்ந்த அறிஞர்களும்
வழங்கியுள்ளனர். (ஆதாரம்-புகாரி பாகம் 9 பக்கம் 151).
اللَّهُ الَّذِي
خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا
فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ
مَا لَكُم مِّن دُونِهِ مِن وَلِيٍّ وَلَا شَفِيعٍ
أَفَلَا تَتَذَكَّرُونَ.
அல்லாஹ்தான் வானங்களையும்,
பூமியையும் அவ்விரண்டிற்கும் இடையிலிருப்பவற்றையும்
ஆறு நாட்களில் படைத்து பின்பு அர்ஷின் மீதாகிவிட்டான்
(32:4).
மேலும் அல்லாஹுத்தஆலா அருள்மறையில் பின்வருமாறு
கூறுகின்றான்:
أَأَمِنتُم مَّن
فِي السَّمَاء أَن يَخْسِفَ بِكُمُ الأَرْضَ فَإِذَا
هِيَ تَمُورُ. أَمْ أَمِنتُم مَّن فِي السَّمَاء أَن
يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا فَسَتَعْلَمُونَ كَيْفَ
نَذِيرِ.
வானத்தின் மேலே உள்ளவன்
பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று
இருக்கின்றீர்களா? அப்போது பூமி நடுங்கும். அல்லது
வானத்தின் மேலே உள்ளவன் உங்கள் மீது கல் மழையை
இறக்குவதில் அச்சமற்று இருக்கின்றீர்களா? எனது
எச்சரிக்கை எத்தகையது என்பதை அறிந்து கொள்வீர்கள்
(67:16, 17).
يَخَافُونَ
رَبَّهُم مِّن فَوْقِهِمْ وَيَفْعَلُونَ مَا
يُؤْمَرُونَ.
(வானவர்கள்) அவர்களு;கு மேலே
உள்ள இரட்சகனை அஞ்சுகிறார்கள், அத்துடன் அவர்களுக்கு
கட்டளையிடப்பட்டவைகளை செய்கிறார்கள் (16:50).
تَعْرُجُ
الْمَلَائِكَةُ وَالرُّوحُ إِلَيْهِ فِي يَوْمٍ كَانَ
مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ.
மலக்குகளும் பரிசுத்த ஆவியும்
(ஜிப்ரீலும்) ஐம்பதாயிரம் வருடம் அளவுள்ள ஒரு நாளில்
அல்லாஹ்வை நோக்கி ஏறிச் செல்வார்கள் (70:4).
إِلَيْهِ يَصْعَدُ
الْكَلِمُ الطَّيِّبُ....
தூய சொற்கள் அவனிடமே மேலேறிச்
செல்கிறது... (35:10).
وَقَالَ
فِرْعَوْنُ يَا هَامَانُ ابْنِ لِي صَرْحًا لَّعَلِّي
أَبْلُغُ الْأَسْبَابَ.أَسْبَابَ السَّمَاوَاتِ
فَأَطَّلِعَ إِلَى إِلَهِ مُوسَى وَإِنِّي لَأَظُنُّهُ
كَاذِبًا...
ஃபிர்அவ்ன் ஹமானிடம், ஹாமானே! எனக்கு ஒரு கோபுரத்தை
கட்டு! அதன் மூலம் வானங்களின் வாயில்களை அடைந்து
மூஸாவின் இறைவனை பார்க்கப் போகிறேன், மூஸா பொய்
சொல்கிறார் என்றே நம்புகிறேன் எனக் கூறினான்...
(40:36,37).
இதன் மூலம் மூஸா (அலை) அவர்கள், அல்லாஹ் வானத்தில்
உள்ளான் என்று ஃபிர்அவ்னுக்கு கூறினார் என்றும் அவன்
அதனை நம்பவில்லை என்றும் தெளிவாகின்றது.
...وَيَحْمِلُ
عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ
..அந்நாளில் எட்டு வானவர்கள்
அவர்களுக்கு மேலே உள்ள உமது இரட்சகனின் அர்ஷை
சுமப்பார்கள் (69:17).
அல்லாஹ் அர்ஷின் மீது உள்ளான் என்பதை உறுதிப்படுத்தும்
சில நபி மொழிகளும் அவற்றுக்கான விளக்கங்களும்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், வானத்திற்கு மேலே
இருப்பவனிடம் நான் நம்பிக்கைக்குரியவனாக
இருக்கின்றேன், எனவே நீங்கள் என்னை நம்பமாட்டீர்களா?
வானத்தின் செய்திகள் எனக்கு காலையிலும் மாலையிலும்
வருகின்றன.(அறிவிப்பவர்:
அபூஸஈதுல் குத்ரி (ரழி) அவர்கள். நூல்: புகாரி 4351,
முஸ்லிம் 2449).
அல்லாஹுத்தஆலா படைப்பினங்களை படைத்து முடித்தபோது எனது
கோபத்தைவிட எனது இரக்கம் முந்திவிட்டது என தனது
சந்நிதானத்தில் அவனது அர்ஷில் எழுதினான் என நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) அவர்கள், நூல்: புகாரி
7422, முஸ்லிம் 2751).
முஆவியா பின் ஹகம் (ரழி) அறிவிக்கின்றார்கள்:
என்னிடத்தில் ஆடு மேய்க்கக்கூடிய அடிமைப் பெண்ணொருத்தி
இருந்தாள், ஒரு தினம் அப்பெண்ணை நான் கடுமையாக
அடித்துவிட்டேன். அது எனக்கு வேதனையாக இருந்தது, ஆகவே
அல்லாஹ்வின் தூதரே! அவளை நான் விடுதலை செய்யட்டுமா? என
வினவ, அப்பெண்ணை தன்னிடம் வரவழைத்து அல்லாஹ் எங்கே
இருக்கிறான்? என வினவினார்கள், அதற்கவள் வானத்தின்
மேலே இருக்கிறான் எனக் கூறினாள், பின்னர் நான் யார்?
என வினவ அதற்கு நீங்கள் அல்லாஹ்வின் தூதுவர் என அவள்
பதிலளித்தாள், உடனே இப்பெண் முஃமினானவள் எனக்கூறி அவளை
விடுதலை செய்யுமாறு பணித்தார்கள்
(ஆதாரம்- முஸ்லிம் 537).
இறைவா! நீயோ மேலேயிருக்கிறாய், உனக்கு மேலே ஒன்றும்
இல்லை என்ற துஆவை நபி (ஸல்) அவர்கள் உறக்கத்திற்குச்
செல்லும்போது ஓதுமாறு ஏவக்கூடியவர்களாக இருந்தார்கள்
என அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கின்றார்கள்
(ஆதாரம் முஸ்லிம் 2713).
நபி (ஸல்) அவர்கள் அரஃபா தினம் மக்களுக்கு உபதேசம்
செய்துவிட்டு நீங்கள் மறுமையில் என்னைப் பற்றி
வினவப்படுவீர்கள் அப்போது நீங்கள் என்ன கூறுவீர்கள்?
எனக் கேட்டார்கள், அதற்கு மக்கள் நீங்கள்
எத்திவைத்தீர்கள், நிறைவேற்றினீர்கள், உபதேசம்
புரிந்தீர்கள் என நாங்கள் சாட்சி கூறுவோம் என்று
கூறினார்கள், இதைக்கேட்ட நபியவர்கள் தனது சுட்டு விரலை
வானத்தை நோக்கி உயர்த்தி பின்பு மக்களை நோக்கி இறைவா!
நீயே சாட்சி, நீயே சாட்சி என மூன்று முறை கூறினார்கள்
(ஆதாரம்-முஸ்லிம் 2941).
ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி) அவர்கள், நபி (ஸல்)
அவர்களின் ஏனைய மனைவிகளிடத்தில் உங்களை உங்கள்
குடும்பத்தினர் நபியவர்களுக்கு திருமணம் செய்து
வைத்தார்கள், என்னை அல்லாஹ் ஏழு வானங்களுக்கு
மேலிருந்து நபியவர்களுக்கு திருமணம் செய்து வைத்தான்
என்று ஆனந்தத்துடன் கூறக்கூடியவராக இருந்தார்கள் என
அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
(ஆதாரம்: புhரி 7420).
அல்லாஹ் ஏழு வானங்களுக்கும் மேலே உள்ளான் என்பதே நபித்
தோழர்களின் நம்பிக்கை என்பதை மேற்கூறிய செய்தி மிகத்
தெளிவாக குறிப்பிடுகின்றது.
நீங்கள் அல்லாஹ்விடம் கேட்டால் பிர்தௌஸ் எனும்
சுவனத்தைக் கேளுங்கள், அதுதான் சுவர்க்கத்தின்
விசாலனமான பகுதியும் உயர்ந்த பகுதியுமாகும். அந்த
பிர்தௌஸிற்கு மேலே ரஹ்மானின் அர்ஸ் உண்டு,
அதிலிருந்துதான் சுவர்க்கத்தின் நதிகள்
ஊற்றெடுக்கின்றன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி)
அவர்கள், ஆதாரம்-புகாரி 7423).
மேற்கூறிய ஹதீஸின் மூலம் அல்லாஹ் அர்ஷ் மீது உள்ளான்
என்பதும் சுவர்க்கம் அர்;ஷிற்கு கீழே உள்ளது என்பதும்
தெளிவாகின்றது.
இமாம்களின் கூற்றிலிருந்து:
அல்லாஹ் அர்ஷ் மீது உள்ளான் என்றும், ஹதீஸில்
வந்திருக்கக்கூடிய அல்லாஹ்வின் பண்புகளையும் நாம்
நம்பிக்கை கொள்ளுவோம் என்றும் தாபியீன்கள் நிறைவாக
இருந்த காலத்தில் நாம் கூறிக் கொண்டிருந்தோம் என இமாம்
அவ்ஸாயீ (ரஹ். இறப்பு ஹி:157) அவர்கள் கூறினார்கள்
(நூல்: அல் அஸ்மா வஸ்ஸிஃபாத்
பக்கம் 408).
ஜஹ்மிய்யாக்கள் கூறுவது போல் (அல்லாஹ்) இங்கே பூமியிலே
உள்ளான் என்று நாம் கூறமாட்டோம், அவன் அர்ஷ் மீது
உள்ளதாகத்தான் கூறுவோம் என இமாம் அப்துல்லாஹ் இப்னு
முபாரக் (ரஹ். இறப்பு ஹி:181) அவர்கள் கூறினார்கள்
(ஆதாரம்: கல்கு அஃப்ஆலில் இபாத்
பக்கம் 10).
அல்லாஹ் அர்ஷின் மீது உள்ளான் என நம்புவது
அஹ்லுஸ்ஸுன்னாக்களின் நம்பிக்கையாகும் என்று இமாம்
அபுல்ஹஸன் அல்அஷ்அரீ (ரஹ். இறப்பு ஹி:324) அவர்கள்
கூறியுள்ளார்கள் (ஆதாரம்
மகாலாதுல் இஸ்லாமியியீன் பக்கம் 1-345).
அல்லாஹ் மேலே உள்ளான் அவன் எல்லா இடத்திலும்
இருக்கிறான் என்று கூற முடியாது, மாறாக அல்குர்ஆனில்
அவன் கூறி இருக்கின்றவாறு வானத்திற்கு மேலே அர்ஷ் மீது
உள்ளான் என்றே கூறப்படவேண்டும் என இமாம் அப்துல்
காதிர் அல்ஜீலானி (ரஹ். இறப்பு ஹி:561) கூறினார்கள்
(ஆதாரம் அல்குன்யா1-54-56).
அல்லாஹ் அர்ஷ் மீது உள்ளான்
என்பதை நிராகரிப்பவனின் சட்டம்:
மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் ஆகியவற்றை
அறிந்து விளங்கிய பின்பும் அல்லாஹ் அர்ஷ் மீது இல்லை
என எவரும் பிடிவாதமாகக் கூறினால் அவர் காஃபிர்
ஆகிவிடுவார், ஏனெனில் அவர் அல்குர்ஆனிலும்
சுன்னாவிலும் திட்டவட்டமாக கூறப்பட்டதை
நிரகாரித்தவராவார். இமாம்களின் பின் வரும் ஃபத்வாக்கள்
இக்கருத்தையே உறுதிசெய்கிறது.
இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: எனது
இரட்சகன் வானத்திலா பூமியலா என்று எனக்குத் தெரியாது
எனக் கூறுபவன் காஃபிர் ஆகிவிட்டான் ஏனெனில் அல்லாஹ்
குர்ஆனில் ரஹ்மான் அர்ஷ் மீது உள்ளான் எனக்
கூறியுள்ளான் (ஆதாரம்: அல்கிக்உல் அப்ஸத் பக்கம் 49).
இமாம் முஹம்மத் இப்னு யூசுஃப் அல்பியாபீ (ரஹ்) அவர்கள்
கூறுகிறார்கள்: யார் அல்லாஹ் அர்ஷ் மீது இல்லை என்று
கூறுகின்றாரோ அவர் காஃபிர் ஆவார்
(ஆதாரம்: கல்கு அஃப்ஆலில் இபாத்
பக்கம் 19).
இமாம் இப்னு குஸைமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேலுள்ள அர்ஷ் மீது உள்ளான்
என்பதை ஏற்றுக்கொள்ளாதவன் காஃபிர் ஆவான், அவனிடம்
தவ்பா செய்யுமாறு கேட்கப்படும், தவ்பா செய்யாவிடின்
அவனின் கழுத்தை வெட்டி குப்பை மேட்டில் வீசவேண்டும்
(ஆதாரம்: மஃரிபது உலூமில் ஹதீஸ்
பக்கம் 84).
குறிப்பு:
துஆ கேட்கும் மனிதன் தன் இரு கரங்களையும் வானத்தின்
பக்கம் நீட்டுகிறான், அவனின் கண்களும் உள்ளமும் தன்
இறைவனை நோக்கும் போது வானத்தை நோக்குகிறது. ஆகவே
மனிதனின் உள்ளுணர்வு கூட அவனது இறைவன் மேலே உள்ளான்
என்பதைத்தான் மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகிறது.
இறைவன் எங்கும் உள்ளான் என்பது அல்குர்ஆனுக்கும்
நபிமார்களின் போதனைகளுக்கும் முரண்படும் தவறான வாதம்
என்பது எள்முனை அளவும் சந்தேகமற்றது.
அல்லாஹ் அர்ஷ் மீது உள்ளான் எனக் கூறுவதால் அவனுக்கு
குறிப்பிட்ட ஓர் இடத்தை கற்பிப்பதாக ஆகிவிடும், ஆகவே
இவ்வாறு கூறுவது கூடாது என சிலர் வாதிடுகின்றனர்.
இவ்வாதம் அர்த்தமற்றதாகும், ஏனெனில் அல்லாஹ் அர்ஷ்
மீது உள்ளான் என நாமாக கற்பனை செய்து கூறவில்லi, மாறாக
அல்லாஹ்வே அல்குர்ஆனில் பல இடங்களில் இக்கருத்தை
கூறியுள்ளான்.
அல்லாஹ்விற்கு இடம் இல்லை எனக் கூறுவோர் அவன்
பிரபஞ்சத்தில் ஓர் இடத்தை எடுத்துக் கொள்ளவில்லை என்றோ
அல்லது படைப்பினங்கள் ஒன்றிலும் தங்கியிருக்கவில்லை
என்றோ கருதினால் அது தவறில்லை, மாறாக அவன் அர்ஷ்
மீதும் இல்லை என்பதும் இதன் நோக்கமாக இருந்தால் அது
தவறான வாதமாகும்.
அல்லாஹ்வே மிக அற்ந்தவன், நபி (ஸல்) அவர்கள் மீதும்
அன்னாரின் குடும்பத்தவர்கள், தோழர்கள் மீதம்
அல்லாஹ்வின் அருளும், சாந்தியும் உண்டாகட்டுமாக.
வெளியீடு: ரவ்ழா தஃவா நிலையம், ரியாத்
[பதிவேற்றிய நாள் :
25-08-2010]
|