|
Go To Index
குழந்தையின் மூளை,
ரகசியக் களஞ்சியம்.
இந்த அவசர உலகில் எத்தனை அவசரமான
வேலைகள் இருந்தாலும் குழந்தைக்கென நீண்ட நேரத்தை
ஒதுக்க வேண்டியது முக்கியம்.
குழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம். அதன் எண்ணற்ற
விந்தைகளை விஞ்ஞானிகள் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக
அறிந்து வருகிறார்கள்.
கருவிலேயே தொடங்குகிறது இதன் கதை. கரு உண்டாகி
நான்கே வாரங்களில் முதலாவது மூளை உயிரணுக்கள் -
நியூரோன்கள் - உருவாகின்றன. என்ன வேகத்தில்?
நிமிடத்துக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் உயிரணுக்கள் என்ற
ரீதியில்!
கோடிக் கணக்கில் நியூரோன்கள் தோன்றி கோடான கோடி
தொடுப்புகளை ஒன்றுடன் ஒன்று உண்டாக்குகின்றன.
இவையெல்லாம் மிகக் கவனமாக ஏற்படுத்தப் பட்டவை.
குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களின் மூளை ஏறத்தாழ
''வெறுமையானது''. அதாவது எதையுமே கற்றுக் கொள்வதற்கு
தயாராக இருக்கும். அவர்கள் வளர வளர கண்களால்
காணுவதும், காதுகளால் கேட்பதும், தொடு கையினால்
உணருவதும், நாக்கினாலே ருசிக்கின்றதும் அவர்களது
'புதிய' மூளையில் பதிந்து மூளையில் மாற்றங்களை
ஏற்படுத்துகின்றன.
நியூரோன்களின் கோர்வைகளிலே தாங்கள்
புரிந்து கொண்டவற்றைச் சேமிக்கிறார்கள். குழந்தையின்
மூளை கற்றுக் கொள்வதற்கு வசதியான கருவியாகும். குறுகிய
காலத்தில் குழந்தை எல்லாம் கற்றுக் கொள்ளும்.
தவழுவதற்கு, நடப்பதற்கு, ஓடுவதற்கு என்று
எல்லாவற்றையும் கற்றுக் கொண்டே போகும். எதிலும் தேடல்
ஆர்வம் என கல்வி வாழ்க்கை வரை இது நீளும். நாம்
எவ்வளவுக்கு குழந்தையுடன் கொஞ்சி,விளையாடுகிறோமோ அந்த
அளவுக்கு நல்ல மன வளர்ச்சி இருக்கும்.
இந்த அவசர உலகில் எத்தனை அவசரமான
வேலைகள் இருந்தாலும் குழந்தைக்கென நீண்ட நேரத்தை
ஒதுக்க வேண்டியது முக்கியம். அவர்கள் தரத்துக்கு நாம்
இறங்கி வந்து விளையாட வேண்டும்.
சிக்கலான நடப்புகளையும், சுற்றுச் சூழலையும்
குழந்தைகள், தங்கள் மனதுக்குள்ளே வாங்கிக் கொள்கின்றன.
ஒவ்வொரு பொருளுக்கும் அதைக் குறிப்பிடும் சொல்லுக்கும்
இடையே சரியாகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வர். அதே
போல ஒவ்வொரு செயலுக்கும் அதைக் குறிப்பிடும்
சொல்லுக்கும் இடையே சரியாகத் தொடர்பு களை ஏற்படுத்திக்
கொள்வர்.
அவர்கள் 12-18 மாத வயதை எய்தும் போது, கண்பார்வை.
திசை, புறமொழி, சைகைகள், உணர்ச்சிகள், மனநெகிழ்ச்சி
போன்றவற்றையும் துல்லியமாகத் தெரிந்து கொள்ளக் கூடிய
ஆற்றலைக் கொண்டிருப்பார்கள். அச்சமயத்தில் அவர்கள்
நாம் பார்க்கின்ற திசையைப் புரிந்து கொண்டு அதை
நோக்கிப் பார்ப்பார்கள். அந்தத் திசையில், அதாவது நாம்
நோக்குகின்ற திசையில், காணும் பொருளை அந்நேரத்தில்
நாம் சொல்லும் வார்த்தையுடன் பொருத்தி மனதில்
இருத்திக் கொள்வார்கள்.
அதே வேளையில் நாம் வெளிப் படுத்தும் சந்தேகங்களையும்
அவர்கள் புரிந்து கொள்வார்கள். எடுத்துக்காட்டாக, ஏதோ
ஒரு புத்தகத்தைக் குழந்தையுடன் சேர்ந்து படிக்கும்
போது, அங்கு படத்தில் இருக்கும் ஒரு மிருகத்தைக்
காட்டி அதன் பெயரென்ன என்று குழந்தை கேட்கும் போது
நாம் ஒரு பெயரைச் சொல்லி ஆனால் அது சரியானதா
தெரியவில்லை என்று ஒரு சந்தேகத்தையும் சேர்த்துக்
கொண்டால், அந்தச் சொல்லை அந்த மிருகத்துடன் தொடர்பு
படுத்தாமல் இலகுவாக மறந்து விடும்.
பிள்ளைகளின் மூளை வளர்ச்சி முதல் மூன்று ஆண்டுகள்
வேகமாக இருக்கும். குழந்தைகளின் மூளை
உயிரணுக்களின் வளர்ச்சி அவர்கள் வளரும் சூழலையும்,
அனுபவங்களையும் பொறுத்து இருக்கும். பெற்றோர்களாகிய
நாம் அவர்களுக்கு நல்ல அனுபவங்களை வழங்க வேண்டும்.
நன்றி : நீடூர் இன்ஃபோ
இது சம்பந்தமான
மேலதிக தகவலுக்கு கீழ்க்காணும் இணையதளத்தைப்
பார்வையிடவும்.
http://www.brillkids.com
நல்ல
குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்
|